tamilnadu

img

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டக் குழு

சென்னை, ஜூன் 19 - நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்த, மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் போராட்டக் குழுவை அமைத்துள்ளது.

மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் சார்பில் புதனன்று (ஜூன் 19) சென்னையில் ‘நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்` நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ஒன்றிய அரசால் திணித்து நடத்தப்பட்டு வரும் ‘நீட்’ தேர்வினால், ஏழை எளிய மாணவர்களின் “மருத்துவர்” கனவு சிதைக்கப்பட்டு வருகிறது. ‘மருத்துவம் மற்றும் சுகாதாரம்’ மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள நிலையில், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வை நடத்துகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு இயற்றிய சட்டங்கள் ஒன்றிய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உயிரியல் பாடத்தில் ‘0’ மதிப்பெண்கள் பெற்றவர் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மருத்துவம் பயில முடியும். தேர்வில் தேர்ச்சி பெற்று, கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றாலும் பணம் இருப்பவர் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கற்றல் சூழலும், பாடத்திட்டமும், இல்லாத போது ‘’ஒரே தேர்வு’’ என்பதை ஏற்க முடியாது. ‘நீட் தேர்வு’ சமநிலையில் இல்லாத இரு மாணவர்களுக்கிடையே நடத்தப்படுகிறது.

மாணவர்கள் வழக்கமாக பள்ளிக்குச் சென்று படிப்பது மாறி, ‘ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முறை’யில் (இன்டகரேட்டட் ஸ்கூலிங் சிஸ்டம்) குறிப்பிட்ட 3 பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இதனால் பயிற்சி மையங்களே பள்ளிகளாக மாறிவருகின்றன.

எனவே, ஏழை எளிய மாணவர்களுக்கு, சமூக நீதிக்கு, பள்ளிக் கல்வி முறைக்கு எதிரான, மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிற ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘முறைகேடுகளின் உச்சம்

நீட் தேர்வு துவங்கிய நாள் முதலே அதில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்து வருகின்றன. இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி - என்டிஏ) முறைகேடுகளின் மூட்டையாக உள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத அளவில் 67 பேர் 720/720 என்ற உச்சக்கட்ட மதிப்பெண் பெற்றுள்ளனர். குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளை கசிய விட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தொடர்ச்சியாக தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றுள்ளனர். 1563 மாணவர்களுக்கு சட்ட விரோதமாக “கருணை மதிப்பெண்” அளித்துள்ளனர். இத்தகைய பல முறைகேடுகள் நடந்தேறியுள்ளன.

முன்னெப்போதும் இல்லாத அளவில் 67 பேர் 720/720 என்ற உச்சக்கட்ட மதிப்பெண் பெற்றுள்ளனர். குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளை கசிய விட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தொடர்ச்சியாக தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றுள்ளனர். 1563 மாணவர்களுக்கு சட்ட விரோதமாக “கருணை மதிப்பெண்” அளித்துள்ளனர். இத்தகைய பல முறைகேடுகள் நடந்தேறியுள்ளன.

போராட்டக்குழு

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.காசி தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், மருத்துவர் டி.காமராஜ், வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டு 13 பேர் கொண்ட போராட்டக்குழு  அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் அரங்கத்தின் தலைவர் மருத்துவர் டி.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில்  மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மேனாள் நீதியரசர் து.அரிபரந்தாமன், மருத்துவர் அரங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.காசி, கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் பேசினர்.