வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார். எஸ்பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து இன்று அவரது வீடு உள்பட 58 இடங்களில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கோவையில் எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷ் வீடு உள்ளிட்ட 41 இடங்களிலும், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்களிலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும் என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் 11.153 கிலோகிராம் தங்கம், வெள்ளி சுமார் 118.506 கிலோகிராம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, கணினி ஹார்டு டிமங்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேலுமணியின் உறவினர்கள் சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்தன், சரவண குமார் ஆகியோர் மீதும், ஸ்ரீ மகா கணபதி நகைக்கடை, கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் நிறுவனம், ஆலம் தங்கம் மற்றும் வைரம் விற்பனை நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் எழிலரசி புகார் அடிப்படையில் குற்றவியல் சதி, குற்றங்களை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.