அம்பத்தூரில் இன்று மின்தடை அம்பத்தூர்,
ஜூன் 3- அம்பத்தூர் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பத்தூர் மில்லினியம் டவுன் கட்டம் 1, 2 மற்றும் 3, பார்க் சாலை, யு.ஆர். நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்.எம். மருத்துவ மனை, எஸ்.எம்.நாராயண நகர், ராம் நகர், கலை வாணர் காலனி, 11 கி.வோ. பம்பிங் ஸ்டேஷன், எச்டி சர்வீஸ், நார்த் அவென்யூ சாலை, கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு அலுவலக சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம், 61 முதல் 72ஆவது தெரு வரை, துரைசாமி 1 முதல் 2ஆவது தெரு வரை, தனபால் செட்டி 1 முதல் 2ஆவது தெரு வரை, ரயில் நிலைய சாலை, வ.உ.சி 1 முதல் 2ஆவது தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடி வடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப் படும் என அதில் கூறப் பட்டுள்ளது.
சென்னையில் போதைப் பொருள்: கடந்த மாதம் 110 வழக்குகளில் 228 பேர் கைது சென்னை, ஜூன் 3- சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் 12 காவல் மாவட்ட தனிப்படையினருடன் ஒருங்கிணைந்து 110 போதை பொருள் விசாரணை வழக்குகளில் 228 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பெருநகரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினர் தீவிர கண்காணிப்புடன் கூடிய தொடர் நடவடிக்கைகளால், கடந்த மே மாதம் சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக 110 வழக்குகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 28 நபர்கள் உட்பட 228 நபர்களை, கைது செய்தனர். இதில் 4 வணிக ரீதியான வழக்குகளும் உள்ளடங்கும். இதில் 91 கஞ்சா வழக்குகளில் 170 பேர் கைது செய்யப்பட்டு 285 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் போதை மாத்திரை விற்பனை சம்பந்தமாக 7 வழக்குகளில் 13 பேர் கைது செய்யப்பட்டு 1,554 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 16 பேர் கடந்த மே மாதத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் மின் கசிவால் தீ விபத்து மின்வெட்டால் நோயாளிகள் அவதி மதுராந்தகம், ஜூன் 3- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் அரசு வட்டார பொது மருத்துவமனை இயங்கி வருகின்றது. இம் மருத்துவமனையில் மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கிராமப்புற மக்கள் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஜெனரேட்டர் மற்றும் மின் இணைப்புகள் உள்ள பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு மருத்துவ ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் சாமர்த்தியமாக அவசரகால தீ அணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். இந்த மின்சார தீ பாதிப்பால் அரசு மருத்துவமனையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் உள்நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் அவதிப்பட்டனர். இந்த மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பழுதாகி சரிசெய்யாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு தற்காலிகமாக மின்சாரம் கூட வழங்க முடியாமல் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர். உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை ராணிப்பேட்டை, ஜூன் 3 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அரப்பாக்கம் கிராமம் சிவராஜ் நகரை சேர்ந்த ராஜ்குமார் மகன் சுரேந்தர் கடந்த மே 31 அன்று மாலை வேலூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மேல குப்பம் கூட்ரோட்டில் எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமுற்ற சுரேந்தர் சிகிச்சை பலனின்றி திங்களன்று (ஜூன் 2) இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் சிஎம்சி மருத்துவமனைக்கு தானம் செய்ததைத் தொடர்ந்து அரசு சார்பாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன் தலைமையில் செவ்வாயன்று (ஜூன் 3) காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாலஸ்தீன போர் நிறுத்தம் கோரி கையெழுத்து இயக்கம்
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன் தொடங்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர் எ.இலட்சுமணன், தொழிற்சங்க தலைவர்கள் பி.கணபதி, எம்.சரவணன், எஸ்.சதீஷ், எம்.கண்ணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஏழுமலை, செங்கம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள் வடிவேல், சுந்தரேசன், வெங்கடேஷ், ரஞ்சித், பூவரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
தரைப்பாலத்தை அகலப்படுத்தக்கோரி போராட்டம்
கும்மிடிப்பூண்டி, ஜூன் 3- கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு, சந்துதெரு, நாட்டாமைக்காரர் தெரு, மணியக்கார் தெரு, தபால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், மேட்டு தெரு திரவுபதி அம்மன் கோயில் அருகே மிகப் பழமையான தரைபாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளநீர் சூழ்ந்து தரைப் பாலம் வழியாக பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பழைய தரைப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
டாஸ்மாக் திறப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு ராணிப்பேட்டை, ஜூன் 3- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் திங்களன்று (ஜூன் 2) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. புதிய அரசு மதுபான கடை அமைய உள்ள இடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
100 நாள் வேலை தொடங்க அதிகாரி உறுதி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூர் பகுதியில் 464 பேருக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து அதிகாரியிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜூன் 5 முதல் 100 நாள் வேலை தொடங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்டச் செயலாளர் பி.கலியமூர்த்தி, வட்டத் தலைவர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அமுதா ஆகியோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.