tamilnadu

அரசியல் தலைவர்கள் பேட்டியளிக்க தேர்தல் ஆணையம் தடை

சென்னை, ஏப். 16- தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்.18 ஆம் தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக கடந்த 1 மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.தேர்தல் விதியின்படி வாக்குப்பதிவு நிறைவடையும் தருணம் வரை 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். 18 ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது ஏப்.16 ஆம் தேதி மாலை 6 மணியுடன் அரசியல் பிரச்சாரம் முடிவடைந்தது.இதன் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வி.ஐ.பி. நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏப்.16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

;