திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே ஒரு அஞ்சல் பிரிப்பகம் 1982 ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் உள்ள, தலைமை அஞ்சலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மதியம் இரண்டு 2 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தபால் அலுவலகங்களிலிருந்தும், பெறப்படும் அனைத்து வகை தபால்களும் இந்த அலுவலகத்தில் முறையாக பிரிக்கப்பட்டு, மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் பட்டுவாடா செய்யப்படுகிறது. மக்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை அஞ்சல் பிரிப்பகத்தில், பதிவு தபால், விரைவு தபால், பார்சல் மற்றும் சாதாரண தபால்கள் என, அனைத்து சேவைகளும், மதியம் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை செய்யப்படுகிறது. தற்போது திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும், இந்த அஞ்சல் பிரிப்பகத்தை மூட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அலுவலகம் மூடிவிட்டால்,இந்த சேவைகளைப் பெற மக்கள் விழுப்புரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நகரத்தின் வளர்ச்சி
மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணாமலையில், தீப மலைசுற்றுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து தினசரி ஏராளமான மக்கள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர். திருவண்ணாமலையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு, திண்டிவனம் – நகிரி, திண்டிவனம்- திருவண்ணாமலை- பெங்களூரு என இரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஒரேஒரு அஞ்சல் பிரிப்பகத்தையும் மூடிவிட்டால், பொதுமக்களின் தபால்கள் செல்ல காலதாமதம் ஏற்படும். மற்றும் அவசர தேவைக்கு நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இதனால், நேர விரயம் ஏற்படும். மேலும், மாணவர்களுக்கும், வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என மக்கள் கூறுகின்றனர்.
சிபிஎம் கண்டனம்
இந்த அஞ்சல் பிரிப்பகம் மூடப்படுவது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் கூறுகையில், ‘பொதுத்துறைகளை சீரழிக்கும் நோக்கில் பல செயல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரில் அஞ்சல் பிரிப்பகம் செயல்படும் போதே, பொதுமக்களின் தபால்கள், குறித்த நேரத்தை விட தாமதமாகவே சென்று சேருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தை மூடநினைக்கும் தபால்துறையின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது’ என்றார். தபால்துறையில் சேவை குறைபாடு ஏற்பட்டால், தனியார் கொரியர் சர்வீஸ்களையும், தனியார் பார்சல் சர்வீஸ்களையும் நாட வேண்டிய நிலை பொது மக்களுக்கு ஏற்படும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, திருவண்ணாமலை நகரத்திலேயே அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் எம்.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.