புதுதில்லி:
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளியன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தில்லி சென்றார். அவரை மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழக அரசின் தில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். ஆனால் தமிழகத்திலிருந்து அதிமுகவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மக்களவை உறுப்பினரான துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் முதல்வரை வரவேற்கச் செல்லவில்லை.
இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுதில்லி வருகை புரிந்த போது, விமான நிலையத்தில் புதுதில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக முதல்வர் தில்லி செல்கையில் அவரை அதிமுகவைச் சார்ந்த எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்பது மரபு. நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் கூட முதல்வர் தில்லி சென்றால், தமிழகத்தில் இருந்தாலும் அதிமுக எம்.பி.க்கள் தில்லி சென்று வரவேற்று அவருடன் அன்றைய தினம் முழுவதும் இருப்பர். ஆனால் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்கச் செல்ல, ரவீந்திரநாத் மட்டும் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவி விவகாரம், அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே முரண்பாடுகள் இருந்துவருவதாக கூறப்படும் நிலையில், முதல்வரை ரவீந்திரநாத் வரவேற்கச் செல்லாதது அதனை வலுப்படுத்தும் விதமாகவே உள்ளது.