tamilnadu

img

இரவில் 10 மணி வரை கடைகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு....

சென்னை:
தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வியாழனன்று (அக். 22) முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் அறிவிப்புகள் வருமாறு:

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3. 2020 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது.எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழு கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின் பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வணிக வளாகங்களும் 22.10. 2020 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.அரசு எடுத்துவரும் சீரிய நடவடிக்கையாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும், நோய் தொற்று நோய் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.இந்த சூழ்நிலை நீடிக்க, எதிர் வரும் பண்டிகைக் காலங்களில் நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க போதிய இடைவெளி விட வேண்டும். பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிவதையும் குறைந்தது ஆறு அடி இடைவெளி விடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அடிக் கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.