tamilnadu

img

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகள்

சென்னை:
முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர்  கூறியதாவது:–

முதலமைச்சரின் உத்தரவின்பேரில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டவர் 1–-ல் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.முதலமைச்சரால் 27.3.2020 அன்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டவர் 2 மற்றும் டவர் 3–-ல் பிரத்யேகமாக கோவிட் சிகிச்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உட்பட 500 படுக்கைவசதிகள், 100 வெண்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் உள்ளன. மேலும், கூடுதல் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.

தங்குதடையின்றி…
ஆக்சிஜன் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் 835 கியூபிக் மீட்டர் வாயு நிலை ஆக்சிஜன் ஆக மாறக் கூடிய தன்மை வாய்ந்தது. இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவிற்கு கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப் பட்டு விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப் படுகிறது.250 மருத்துவர்கள், 400 செவிலியர் கள், 400 மருத்துவம் சார்ந்த பணியாளர்களுடன் சிறப்பாக செயல்படும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கோவிட் சிகிச்சை மையத்தின் மூலம் இதுவரை புறநோயாளிகளாக 21,000 நபர்களும், உள்நோயாளிகளாக 15,100 நபர்களும் சிகிச்சை பெற்று 13,600 நபர்கள் குணமடைந்துள்ளனர் (90%). இதுவரை 18,200 ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைகளும், 10,500 சி.டி. ஸ்கேனும் செய்யப்பட்டுள் ளது. மேலும் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, நோடல் அலுவலர் ரமேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;