tamilnadu

img

ஒடிசா மாநில இளம் பெண் மர்மக் கொலை

திருப்பெரும்புதூர், ஜன. 22- காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்துள்ள ஆதனஞ்சேரியில் ஒடிசாவைச் சேர்ந்த கரீனா பிரியதர்ஷினி (20) என்பவர் கடந்த ஒரு வருடமாக வாடகை வீட்டில் தங்கி ஒரகடம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், உற்பத்திப் பிரிவில் பணியாற்றினார். அதேபோல்  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (22) என்பவரும் இவருடன் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செவ்வாயன்று (ஜன. 21) ரஞ்சிதா வேலைக்கு சென்ற நிலையில், பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் ரஞ்சிதா வேலை முடித்து மாலை வீட்டிற்கு வந்தபோது, பிரியதர்ஷினி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை எழுப்பிய போது, அவர் எழவில்லை. இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பிரியதர்ஷினியை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாகக் கூறினார். இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த பிரியதர்ஷினி கண்ணத்திலும், கழுத்துப்பகுதியில் நகக்கீறல்கள் இருந்துள்ளது. இதனால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற நோக்கத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;