அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், தமிழ்நாடு அரசுப் போக்குரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் பயணம் செய்யும் 5 வயதுள்ள குழந்தைகள் வரை கட்டணம் இல்லை. மேலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில், தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் வரும் 12 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 3 வயது குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில், இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 3 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாதிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.