15 பத்திரிகையாளர்கள் பாதிப்பு
சென்னையை தலையிடமாக கொண்டு செயல்படும் 3 தொலைக் காட்சிகள், பொழுதுபோக்கு வானொலி ஆகிவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் 15க்கும் மேற்பட்டோருக்கு கடந்த இரண்டு நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 75க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணகிநகரில் 23 பேருக்கு தொற்று
சென்னை கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணை ஆணையருக்கு கொரோனா
சென்னை தி.நகர் துணை ஆணையர் ஒருவருக்கும், அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் காவல்துறையை சேர்ந்த 96பேர் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா வார்டில் பெண் மரணம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவ்லத் நிஷா (வயது 49) செவ்வாயன்று (மே 12) உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்: 16 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 153ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு: 32 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 388ஆக அதிகரித்துள்ளது.
அபராதம் ரூ.5 கோடியை தாண்டியது
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக திங்கட்கிழமை (மே 12) காலை 9 மணி வரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 761 வழக்குகள் பதியப்பட்டுள் ளது. 4 லட்சத்து 59 ஆயிரத்து 55 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அபராதமாக 5 கோடியே 11 லடசத்து 27 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 79 ஆயிரத்து 312 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 308 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 13 பேர் பலி
கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் என இரண்டு நாட்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு
சென்னையில் கொரொனாவால் 4 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப் பட்டு, 3 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.