tamilnadu

ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் புதிய சட்டம்...

சென்னை:
“ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும்” என்று, முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி “ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து” அவசர கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது.

அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துக் களை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும், “இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்துப் போதுமான காரணங் களைச் சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது” என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “உரிய விதிமுறைகளை உருவாக்கிப் புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில்தெளிவுபடுத்தியிருக்கிறது.பொதுநலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்விதத் தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றையதினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார்.ஆகவே, முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளை
யாட்டுகளைத் தடைசெய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்” என்றார்.

;