tamilnadu

img

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய துறை: மு.க.ஸ்டாலின்....

சென்னை:
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் புதிய துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும், தமிழ் மக்களின் பேராதரவுடன் விரைவில் அமையவிருக்கும் திமுக தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

1957ஆம் ஆண்டு முதன்முறையாகக் திமுக தேர்தல் களத்தைச் சந்தித்தபோது வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமித்திட வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்த இயக்கம் இது.உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமே தமிழர்கள் பெருமளவில் வெளிநாடுகளைத் தேடிச் சென்ற நிலை மெல்ல மெல்ல மாறி, தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கைகளாலும் - பொது நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் பலரும் பொறியியல் - மருத்துவம் பட்டம் பெற்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் உள்பட உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

திராவிட இயக்க உணர்வும் - தமிழர்கள் என்ற பீடும் பெருமையும் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களாக, தங்கள் தாய்த் தமிழகத்தின் நலனை என்றும் மறக்காதவர்கள். அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களான தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் காக்கும் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து, இந்தியளியுறவுத்துறை - தூதரகங்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் ஆற்றி வரும் இயக்கப் பணிகளை மேம்படுத்தி - கழகத்திற்கு மேலும் வலுசேர்த்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய அணியாக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக சட்டதிட்ட விதி 6, பிரிவு 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கழக உறுப்பினர்களாக இணைப்பதற்கும் - ஒவ்வொரு நாட்டிலும், கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் கழக சட்டதிட்ட விதி 31- பிரிவு 20-ன் கீழ் ‘வெளிநாடு வாழ் இந்தியர்  நல அணி’ என்ற ஒரு புதிய அணி அமைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அணியின் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., இணைச் செயலாளர்களாக மருத்துவர் செந்தில்குமார் எம்.பி., புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் பொதுச் செயலாளரால் நியமிக்கப் பட்டுள்ளனர்.ஜனவரி 9 ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், திமுக சார்பிலான இந்த அணி தன் பணியை அனைவரும் போற்றத் தக்க வகையில் சிறப்புடன் தொடங்கி, உலகெங்கும் வாழும் தாயகத் தமிழர்களின் உரிமை - நலன் காக்க, தக்க வண்ணம் துணை நிற்கும்.வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் புதிய துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும், தமிழ் மக்களின் பேராதரவுடன் விரைவில் அமையவிருக்கும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

;