tamilnadu

img

1000 கி.மீ.க்கு அப்பால் ‘நீட்’ தேர்வு மையங்கள்!

சென்னை, ஆக. 3 - மருத்துவம் படிக்க விரும்புவோரின் கனவில் ‘நீட்’ எனும் அநீதியான தேர்வின் மூலம் மண்ணை அள்ளிப் போட்ட ஒன்றிய பாஜக அரசு, தற்போது ‘நீட்’ தேர்வை எளிதில் எழுதி விடாதபடி, தேர்வு மையங்களை 500 முதல் 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் ஒதுக்கி- தமிழக மாணவர்களுக்கு எதிராக அடுத்த வஞ்சகத்தை அரங்கேற்றியுள்ளது.

இதனால், நீட் தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள், லட்சக்கணக்கில் செலவு செய்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது, உளவியல் ரீதியாக அவர்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

மோடி அரசின் தொடர்ச்சியான இந்த  வஞ்சகத்திற்கு, தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்களுக்கு ‘நீட்’  தேர்வு மூலமே சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி எம்டி, எம்எஸ், முதுநிலை  டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. தமிழகத்தில் இருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்வுக்கு முதல் நாள் இரவு திடீரென நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இளநிலை மருத்து வப் படிப்புளுக்கான நீட் தேர்வில், முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அரங்கேறிய லஞ்ச - ஊழல்- மோசடிகள், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வை, தேதி குறிப்பிடாமல் மோடி அரசு தள்ளி வைத்தது.

பின்னர், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 11 அன்று காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்களை ஒதுக்குமாறு விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் எங்கோ ஒரு மூலையில் உள்ள இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், விமானங்களில் குறைந்தது ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவு செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு என தேர்வு எழுதச் செல்லும் ஒவ்வொருவருக்கும்  ரூ. 30 ஆயிரம் கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் இதேபோல 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று தேர்வர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீட் முதுநிலை தேர்வுமைய குளறுபடிக்கு  தீர்வுவேண்டும்!
கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 3 - தமிழக மருத்துவ மாணவர்களை அலைக்கழிக்காமல், ‘நீட்’ முதுநிலை தேர்வு மைய குளறுபடிக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைத்தளப் பக்கத்தில், கருத்துப் பதிவிட்டுள்ள கே. பாலகிருஷ்ணன் அதில் கூறியிருப்பதாவது:

“இளநிலை ‘நீட்’ ஊழல் அம்பலமான பின்னணியில் - கடந்த ஜூன் 23 அன்று நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு  திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இப்போது, ஆகஸ்ட் 11 அன்று நீட் முதுநிலை தேர்வு இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா போன்ற மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பல ஆயிரங்கள் செலவு செய்து விமானத்தில் செல்ல வேண்டிய நெருக்கடியையும், கடைசி நேர மன உளைச்சலையும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த முடிவு உருவாக்குகிறது. ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, குளறுபடிக்கு முடிவு கட்டுவதுடன், தேர்வு மைய அலைக்கழிப்பைத் தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.