ஒன்றிய பட்ஜெட்டில் பட்டியல் சாதி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.1,65,493 கோடி; பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.1,24,909 கோடிகள் - என மொத்தம் ரூ.2,90,402 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்ட தொகைகள் பெரிதாகவே தெரிகிறது. ஆனால் உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘ஒதுங்கும்’ தொகை எவ்வளவு?
திட்டங்களில் இரண்டு வகை உண்டு.
ஒன்று, நேரடியாக பட்டியல் சாதி, பழங்குடி மக்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிற “இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டங்கள்” (Targetted Schemes). மேற்கண்ட ஒதுக்கீடுகளில் இந்த வகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது 87922 கோடிகள். அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 30% மட்டுமே.
இரண்டாம் வகை, “இலக்கிடப்படாத திட்டங்கள்” (Non Targetted Schemes). அதாவது பொதுத் திட்டங்களுக்கு மடை மாற்றம் ஆகிற தொகை - ரூ.2,02,480 கோடிகள். அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 70 சதவீதம்.
பொதுத் திட்டம் என்றால் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கும் சேர்த்துதானே; ஆகவே எஸ்.சி, எஸ்.டி நிதியில் இருந்து இந்த திட்டங்களுக்கும் தரப்படுகின்றன என்பது அரசின் விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் மோசடியானது.
உண்மையில் பட்டியல் சாதி - பழங்குடி துணைத்திட்ட நிதிகள் காலாகாலமாக மடை மாற்றத்திற்கு ஆளாவது இப்படிப்பட்ட இலக்கிடப்படாத திட்டங்களின் வழியாகத்தான்.