சென்னை, ஜூன் 20- சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவ மனையில் உள்ள கதிரியக்கவியல் துறையில் புதிதாக 16 கூறு சிடி ஸ்கேன் கருவி, எக்ஸ் ரே உபகரணங்கள் மற்றும் ஸ்கேன் கருவி ஆகியவை நிறுவப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜய பாஸ்கர், புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் நுழைவு வளைவையும் திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உலக தரத்திலான மருத்துவக் கருவி களின் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம்
முன்னதாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் ரூ.15 லட்சம் செலவில், 8 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர்,“ தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவ மனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உள்ளிட்ட 10 அரசு மருத்துவமனைகளில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க உள்ளோம். இதற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையானது உடலின் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் பாதிக்கப் பட்ட இடத்தில் மட்டும் கதிர்வீச்சு செலுத்த பயன்ப டும் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ என்ற நவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்றார். நிகழ்ச்சிகளில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் டாக்டர் திரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.