tamilnadu

img

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்....

சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72.தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல் நிலை தொடர்ந்து கவலைகிடமாக இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங் கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு துரைகண்ணு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் வந்தனர். தொடர்ந்து ஆம்புலன்சின் உள்ளே துரைக் கண்ணுவின் உடல் இருந்த நிலையில், அதனருகே வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவர் சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது.

சொந்த ஊரில் அடக்கம்
அமைச்சர் துரைக்கண்ணு உடல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரி வன்னியடியில் உள்ள தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.முன்னதாக, ராஜகிரியில் அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் அவர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஒரு நாள் துக்கம்
துரைக்கண்ணு மறைவையொட்டித் தமிழக அரசு சார்பில் ஒருநாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டிச் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.

தலைவர்கள் இரங்கல்
அமைச்சரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.