tamilnadu

img

தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 21- தென் இந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், சனி,ஞாயிறு என இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 8ஆம் தேதி கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தொடங்கிய தென் மேற்கு பருவ மழையின் வடதிசை நகர்வு வாயு புயல் காரணமாக தடைபட்டிருந்ததாகவும், தற்போது, தென் மேற்கு பருவ மழை தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமா மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார். தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என்றும் கூறினார். தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் இதுவரை இயல்பான மழை அளவு 39.புள்ளி 6 மில்லிமீட்டர் என்ற நிலையில் இதுவரை 24 புள்ளி 8 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.