tamilnadu

img

வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதை தடுக்க சூழ்ச்சி... கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்த தமிழக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை:
வேளாண் சட்டங்களை எதிர்த்தும், உள்ளாட்சி ஊழல் முறைகேடுகளை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றவிருந்த நேரத்தில், இதனை தடுக்கவே கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்த தமிழக அதிமுக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 அன்று நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அக்டோபர் 1 வியாழனன்று இரவு  அறிவித்துள்ளது.  இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.அக்டோபர் 2 ல் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என செப்டம்பர் 26 ஆம் தேதிதான் அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று இருப்பது அரசுக்கு தெரியும். அதிலும் கூட, அரசு விதித்துள்ள கோவிட்-19 தடுப்பு விதிகளை கடைப்பிடித்து, அரசு சுட்டிக்காட்டியுள்ள  வழிமுறைகளை பின்பற்றி கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவித்துவிட்டு, ஐந்து நாட்கள் இடைவெளியில் அதை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், மத்தியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதும், அப்படி தீர்மானம் நிறைவேற்றினால் நீதிமன்றங்களில் பல்வேறு கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும். அதை தவிர்ப்பதற்காகவே மாநில அதிமுக அரசு கிராமசபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஊராட்சித் தலைவர்களுக்கு வேண்டுகோள்
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காலங்களில், ஜவஹர் வீடுகட்டும் திட்டம், நூறுநாள் வேலை திட்டம், சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு எதிராகவும்  கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை அறிந்தும் கிராமசபைக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கிராம சபைக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமெனவும், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.