tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

பழங்களின் விலை கடும் உயர்வு
சென்னை, ஆக.24- வெளிநாட்டு ஆப்பிள் வாஷிங்டன், ராயல்கலா இதற்கு முன்பு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இமாச்சலபிரதேசத்தில் இருந்து வரும் உள்நாட்டு ஆப்பிள் கிலோ ரூ.100-க்கு கிடைக்கிறது. அதேசமயம் ஆரஞ்சு பழம் (மால்ட்டா ரகம்) ரூ.100க்கு விற்ற கிலோ தற்போது ரூ.180-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் கொய்யாப் பழம் கிலோ ரூ.30-40க்கு கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.70-க்கு விலை உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வரும் கொய்யா ரூ.50க்கு விற்கப்படுகிறது. மேலும், வாழைப்பழம் அனைத்தும் கிலோவுக்கு ரூ. 20 கூடி உள்ளது. பூவன் ரூ.30-லிருந்து ரூ.50க்கும், ஏலக்கி ரூ.80-லிருந்து ரூ.100க்கும் உயர்ந்துள்ளது. செவ்வாழை ரூ.60-லிருந்து ரூ.80, கற்பூரவள்ளி ரூ. 70-லிருந்து ரூ.80, நாட்டுப்பழம் ரூ.60-க்கு விலை உயர்ந்து விட்டது. பப்பாளி இதற்கு முன்பு 1 கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.50க்கு உயர்ந்துள்ளது. சப்போட்டா பழம் ரூ.30-லிருந்து ரூ.80-க்கு விலை உயர்ந்து விட்டது. சாத்துக்குடி பழம் ரூ.80-லிருந்து ரூ.100-க்கும், நாட்டு நெல்லிக்காய் கிலோ ரூ.80-லிருந்து ரூ.150-க்கும் விலை உயர்ந்துள்ளது. 2 ரூபாய்க்கு விற்ற 1 எலுமிச்சம் பழம் தற்போது ரூ. 7க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வு பற்றி அயனாவரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரி சாமுவேல் கூறுகையில், ‘பற்றாக்குறை காரணமாக அனைத்து பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் இந்த மாதம் முகூர்த்த நிகழ்ச்சிகள், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் பழங்கள் விலை மேலும் உயரும்’ என்றார்.

சுயதொழில் வளர்ச்சித் திட்டம் : திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
சென்னை,ஆக.24-மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் எம்எஸ்எம்இ தொழில் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனம் அதன் விரிவாக்க கிளை சென்னை இரு திறன் மேம்பாட்டு பயிற்சிகளைஆக.26 முதல் 30 ஆம் தேதி வரை கிண்டியில் நடத்தவுள்ளது. பேக்கரி பொருட்களான பிரட், பப்ஸ், கேக்ஸ், பன், ரஸ்க், குக்கீஸ் முதலியவைகள் தொழில் நுட்ப வல்லு நர்கள் மூலம் தயாரிக்கும் செய்முறை விளக்கங்கள் பயிற்சியில் விளக்கப்படும். குறைந்த முதலீட்டில் உற்பத்தி செய்யப்படும் வாஷிங் பவுடர், டிட்டெர்ஜென்ட் சோப், குளியல் சோப், டிஷ்வாஷ், ஹாண்ட் வாஷ், மல்டி பர்பஸ் லிகுய்ட், ரூம் கிளினர், அகர்பத்தி, மெழுகுவர்த்தி, பினாயில் கருப்பு -வெள்ளை, கற்பூரம், கம்யூட்டர் சாம்பிராணி போன்றவைகள் தயார் செய்யும் செய்முறைகள் பயிற்சியில் விளக்கப்படும். தொழில் நுட்ப ஆலோசனைகள், உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் வாங்கவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும், தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் விளக்கப்படும். மேலும் சுய தொழில் தொடங்குவதற்கு ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்தல், அரசின் சலுகை திட்டங்கள் மற்றும் வங்கி கடன் திட்டங்கள் பற்றிய விவரங்கள் அடங்கும். படித்த வேலையற்ற இளைஞர்கள் இந்த பயிற்சிகளை பெறலாம். 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி கட்டணத்தில் எஸ்சி. எஸ்.டிபிரிவினர்களுக்கு 50விழுக்காடு கட்டண சலுகை உண்டு.  பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும். இடம் : எம்.எஸ்.எம்.இ கேம்பஸ், கிண்டி,சென்னை -32. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் பதிவு மற்றும் விவரங்களுக்கு 9551950555 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.