மணல் குவாரிகள் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய 34 இடங்களில் ஒரே நேரத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப அதிகார வரம்பு இல்லை; மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், விசாரணைக்கு தடையில்லை என்றும், அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவுக்கு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் விளக்கமளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் அறிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.