tamilnadu

img

அனைவருக்கும் பொது மயானம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சாதி ரீதியான மயானங்களை ஒழித்து அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான மயானங்களாக மாற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாவகுறிச்சி கிராமத்தில் வண்டி பாதைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்தின் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மேல்முறையீடு மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கே.முருகேஷ் பாபு அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்தது.

மேலும், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிய பிறகும், நாட்டில் இன்னும் சாதிய கட்டுகளை உடைத்தெறிய முடியவில்லை, மதச்சார்பற்ற அரசு கூட சாதி ரீதியாக தனித்தனி மயானங்கள் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என்றும் தெரிவித்தது. தமிழகத்தில் சாதி ரீதியான மயானங்களை ஒழித்து அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான மயானங்களாக மாற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.