சென்னை, மார்ச் 13 - க. பொன்முடியை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்து, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்துள் ளார்.
வழக்கு ஒன்றில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடிக்கு, உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்ட னை விதித்ததால், அவர் எம்எல்ஏ பதவியை இழந்தார். அதன் காரணமாக அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனிடையே, மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கும் தீர்ப்பை நிறுத்தி வைத்து அண்மையில் உத்தரவிட்டது.
இதனால், பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை மீண்டும் பெறுவார் என்றும், நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகல் புதனன்று வெளியான நிலையில், பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார்; மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியாகி உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் பொன்முடி எம்எல்ஏ-வாக தொடர்வதால், அவரை மீண்டும் அமைச்சராக நியமித்து, ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். வியாழக்கிழ மையன்று காலையோ, அல்லது மாலையோ பொன்முடி அமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.