சென்னை:
நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ரூ.3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்தனர்.இந்நிலையில் நிலம் வாங்கிய பிறகுதான் பல பிரச்சனைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது.இதனையடுத்துநிலத்தை திருப்பி வாங்கிக் கொள்வதாகவும் பணத்தை திருப்பித் தருவதாகவும் ஒப்பந்தம்ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாக தெரிகிறது.ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகையான ரூ. 2.70 கோடியை சூரிக்கு தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கும் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டது.இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐ க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதிக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.