திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர், மே 27- தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் வரும் வெள்ளியன்று (மே 31) திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இந்த முகாமில், 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாம் வெள்ளியன்று, காலை 10 மணிக்கு தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
காஞ்சிபுரம், மே 27- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சி எண்டத்தூர் சாலையில் நூக்காலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தை ரமேஷ் என்பவர் கவனித்து வருகிறார். கோவிலில் காலை மற்றும் மாலை நேரத்தில் பொது மக்கள் வழிபடுவர். இந்நிலையில் ஞாயிறன்று இரவு கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் திங்களன்று (மே 27) காலை கோவிலை திறக்க ரமேஷ் சென்றார். அப்போது கோவில் திறந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி உத்திரமேரூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து அங்குள்ள சிசிடிவி கோமராவில் சோதனை மேற்கொண்டனர். இதில் மர்ம நபர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர், மே 27- திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு திங்களன்று (மே 27) மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) இராஜகோபால் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மொத்தம் 158 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.பன்னீர்செல்வம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பெ.பார்வதி மற்றும்
அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள்
சென்னை,மே 27- சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்தவர்கள் நாங்கள் காவலர்கள் என்று கூறி தப்ப முயன்றனர். ஆனால் அவர்களை ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 காவலர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வார்கள் ரவிச்சந்திரன், சிவசங்கர், தலைமை காவலர்கள் ஏழுமலை, சந்திரசேகர், காவலர் அஸ்மத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி, விடுதி பணியாளர் ரகுமான், ஜானகிராமன் ஆகியோருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.