tamilnadu

காஞ்சிபுரம் மற்றும் சென்னை செய்திகள்

தலைமையாசிரியர் கண்கள் தானம் 
திருப்போரூர், ஜூன் 22-  காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் மானாமதி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏகாம்பரம். தலைமை ஆசிரியர் இவர் மாமல்லபுரம் அடுத்த தேவ நேரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். பஞ்சம்திருத்தி, மானாமதி ஆகிய ஊராட்சிகளில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றியவர். இறுதியாக மாணமதி துவக்கப்பள்ளியில் தன்  பணியை நிறைவு செய்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும்  இடதுசாரி இயக்கங்களுடன் மிகவும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் வெள்ளியன்று (ஜூன் 22) உடல் நலக்குறைவால் ஏகாம்பரம் மரணம் அடைந்தார். சமூகத்தின் மீது மிக்க அக்கறை கொண்ட தலைமையாசிரியர் ஏகாம்பரம் தன்னுடைய இரண்டு கண்களையும் தானம் செய்து இருந்ததால், அவரது கண்களை அகர்வால் கண் மருத்துவமனை தானமாக எடுத்துக் கொண்டது. பின்னர் அன்னாரது உடல் திருக்கழுக்குன்றம் கானக்குயில் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (ஜூன் 23) மதியம் 3 மணி அளவில்  நடைபெறுகிறது.  மறைந்த தலைமையாசிரியர் ஏகாம்பரத்தின் உடலுக்கு  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் அஞ்சலி செலுத்தினார்.
 

நகை தொழில் மாநாடு 
சென்னை,ஜூன் 23- விலை மதிப்புள்ள கற்கள் மற்றும் நகைத் தொழில் துறை மிகவும் விரும்பி எதிர்பார்க்கும் மாநாடு மிகப் பெரிய அளவில் மீண்டும் நடைபெறவுள்ளது.  விலை மதிப்புள்ள கற்கள் மற்றும் நகைத் தொழில் பற்றிய தனித்துவமான அறிவாற்றல் பகிர்தல் தளமாகவும் இந்திய நிறுவனங்களிடம் இருந்து கற்றல் மற்றும் அதன் மூலம் பலன் பெறும் தளமாகவும் இது அமையும். இதில் இந்தத் தொழில் துறையில் மிகவும் பிரபலமான ஆற்றல் மிக்க நபர்கள் பங்கேற்கின்றனர். அகில இந்திய விலை மதிப்புள்ள கற்கள் மற்றும் நகைகள் உள்நாட்டுக் கவுன்சில் (ஜிஜெசி), தனது முதன்மை யான நிகழ்வான மன்தன் விலை மதிப்புள்ள கற்கள் மற்றும் நகைகள் மாநாடு – ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் வல்லுநர்களும் அறிவாற்றல் மிக்கவர்களும் கருத்துகளை பகிரவுள்ளனர். தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) வழங்கும் இதை உலக தங்கக் கவுன்சில் ஆதரவு அளித்துள்ளது.