சென்னை, பிப். 4- சமூகத்தின் அச்சாணியாக உள்ள கல்வியை பாதுகாக்க பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என அந்த அமைப்பின் 75ஆவது ஆண்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அறைகூவல் விடுத்தார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் அசோசியேஷன் 75ஆம் ஆண்டு விழா, சிறப்பு மலர் வெளியீடு, புதிய அலுவ லக கல்வெட்டு திறப்பு விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை (பிப். 4) நடைபெற்றது. தலைவர் பி.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப் பாளர் என்.சேட்டு வரவேற்றார். பொதுச்செயலாளர் எம்.எஸ்.பால முருகன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அமித் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் விழா நோக்கம் குறித்து பேசினார்.
அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விழாவை துவக்கி வைத்து பேசுகையில், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் பல நிறைவேற்ற வேண்டியுள்ளது. நிதி நிலை நெருக்கடி சீரானவுடன் நிச்சயம் உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன் றாக நிறைவேற்றப்படும். என்னதான் அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது உங்கள் கைகளில்தான் உள்ளது. மாணவர்கள் கடந்தகால வரலாறு, தமிழ் மொழி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சமத்துவ உணர்வு பெற வேண்டும். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்கள் கைகளில் உள்ளது. எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தால் என்ன வேலைக்கு செல்லலாம் என்பதை யெல்லாம் கூட நீங்கள் பாடத்துடன் இணைத்து கற்றுக் கொடுக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என அனை வரும் ஒரே குடையின் கீழ் இணைந்து கோரிக்கைகளுக்காக ஒட்டுமொத்த மாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நிலையான ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் போராட்டத் தின் மூலமே பெற முடிந்தது. அப்படி போராடுவதற்கு ஒரு அமைப்பு தேவை. உங்கள் உரிமைகளை பெற ஆசிரியர், பேராசிரியர் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றி ணைந்து ஒரே குடையின் கீழ் திரண்டு போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பச்சையப்பன் கல்லூரி விவகாரம்
அண்ணாமலை பல்கலைக்கழ கத்தை அரசு உடைமையாக்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு கிடைத்த போது அதை முதல்வரிடத் திலே எடுத்துக் கூறி அரசுடைமை ஆக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். கல்வித்துறையில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் 10 ஆண்டுகாலம் பணி யாற்றிக் கொண்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட் டுள்ளார். இப்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திலே ஆசிரியர்களை பணியமர்த்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆசிரி யர்களை பணியமர்த்துவதில் அரசுக் கல்லூரி என்றால் அதற்கு ஒரு முறை. தனியார் கல்லூரிக்கு ஒரு முறை, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு ஒரு முறை. சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஒருமுறை என உள்ளது. கவுரவ விரிவுரையாளர்களும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஒரே கல்லூரி யில் பணிபுரிகிறார்கள், ஆனால் ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, பல்கலைக்கழக ஆசிரியர் பணிநியமன கழகத்தை உருவாக்கி, அதன் மூலம் தனியார், அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரி என அனைத்து கல்லூரிக ளுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அனைத்து ஆசிரியர்களும் ஊதியம் உள்பட அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். கேரளா வில் தனியார் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி என எந்த கல்லூரி யாக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அதுபோல் நாடு முழு வதும் ஏன் சட்டம் இயற்றக் கூடாது என்றும் அவர் வினவினார்.
ஆபத்தான முயற்சி
அரசு உதவி பெறும் டிபி ஜெயின் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்தையும் மூடிவிட்டு, படிப்படியாக சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்கிறது. இதை அனுமதித்தால் மற்ற 140க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகள் அனைத்தும் சுய நிதிக் கல்லூரியாக மாறும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தை ரத்து செய்து, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இப்போது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளை தடுக்க வில்லை என்றால் ஏழை எளிய மாண வர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாகி விடும். ஆசிரியர்கள் தங்களுடைய பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராட வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தற்போது கல்வித் துறை யின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் போராட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், தனியார் மய கொள்கைகளுக்கு எதிராகவும் போராட ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விழா மலர் வெளியீடு
முன்னதாக விழா மலரை கே.பால கிருஷ்ணன் வெளியிட அமைச்சர் க.பொன்முடி பெற்றுக் கொண்டார். சங்க அலுவலகத்திற்கான கல்வெட்டை அமைச்சர் திறந்து வைத்தார். மூத்த சங்க நிர்வாகிகளை கே.பால கிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் கல்லூரி கல்வித்துறை இயக்குநர் எம்.ஈஸ்வரமூர்த்தி, மண்டல இணை இயக்குநர் ஆர்.ராவணன், முன்னாள் பொதுச்செயலாளர் சி.பிச்சாண்டி, முன்னாள் நிர்வாகிகள் பி.சாந்தி, கே.பாண்டியன், ஐ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பேசினர்.