tamilnadu

img

தீவிரமடையும் புயல்: மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறியுள்ளதால்,தெற்கு அந்தமான் கடலுக்குள் மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13.05.2023 அன்று சற்று வலுவிழந்து 14.05.2023 அன்று 120-145 கி.மீ/ மணி வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர் அவர்களுக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் அவர்களுக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், படகுகள். விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14.05.2023 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.