சென்னை:
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல் திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெயர் இடம்பெறவில்லை.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் வெடித்திருக்கிறது. இருவரும் தங்களையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இது தொடர்பாக அதிமுகவில் பரபரப்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7 ஆம் தேதியன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் செவ்வாய்க்கிழமையன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்காமல் புறக்கணித்தார்.இதனிடையே சென்னையில் புதன்கிழமையன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் ஆங்கிலத்தில் ஒரு அழைப்பிதழ் அச்சடித்துள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தமிழில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறு நிகழ்ச்சி என்பதால் துணை முதலமைச்சர் பெயர் விடுபட்டுள்ளது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளது என்றும் செய்தியாளரிடம் கூறினார்.