tamilnadu

img

பேச்சுவார்த்தை குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகளை நுழைத்த அரசு - மின்ஊழியர் 2ஆம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி!

சென்னை, ஜன.6 - மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும். ஒப்பந்தம் முடிந்து 3 ஆண்டுகளை கடந்தும் நிர்வாகம் பேச்சுவார்த்தையை தொடங்காமல் உள்ளது. ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10 அன்று வேலைநிறுத்தம் செய்ய மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது.

இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்கும் வகையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல இணை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாயன்று (ஜன.3) நடைபெற்ற முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று (ஜன.6) நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகி சேக்கிழார், “ஊதிய பேச்சுவார்த்தைக்குழுவில் அரசு தரப்பில் இருந்து இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்து புதிய பேச்சுவார்த்தை குழுவை உருவாக்கியுள்ளார்கள். இதுவரையிலும் மின்வாரிய அதிகாரிகள் தலைமையிலான குழுவிடம் பேசிதான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வந்தது.

இதற்கு மாறாக, இந்தமுறை அரசு எதேச்சதிகார முறையில் செயல்பட்டு மின்வாரிய பேச்சுவார்த்தை குழுவில் 2 அதிகாரிகளை புகுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. அந்த இரண்டு உறுப்பினர்களையும் நீக்க வேண்டும். இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஜன.9 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டுமா அல்லது திட்டமிட்டபடி ஜன.10 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாமா என்பதை பேசி முடிவெடுப்போம்” என்றார்.