மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டை அரசு மறுப்பது மிகவும் வேதனைக்குரியது என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதி மருத்துவப்படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை இந்த ஆண்டே அமலாக்க வேண்டும் என்ற மதுரையை சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அமைச்சரவை இந்த மசோதாவை தமிழக ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. தற்போது வரை அந்த சட்ட மசோதா ஆளுநரின் பரிசிலனையில் தான் உள்ளது.
எனவே இது குறித்து ஆளுநரிடம் கேட்டு பதில் தெரிவிக்குமாறு, ஆளுநரின் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என்றும் காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது தான் நீதிபதி கண் கலங்கி “கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது. அவர்கள் தாங்கள் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்ற கனவோடு படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அரசு மறுக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரியது” என்று கண்கலங்கியபடி தனது கருத்தை தெரிவித்தார்.