கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் தனியார்ப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்குச் சீருடை மற்றும் புத்தக கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள லிட்டில் ப்ளவர் எனும் தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் சீருடை மற்றும் பாடப் புத்தகங்களுக்காகக் கட்டணம் செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதன் பேரில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி தலைமையில் விசாரணைக்கு வந்தது.
கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கீழ் சேரும் மாணவர்களுக்கான சீருடை, பாடப் புத்தகங்களுக்கான கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுக்கான செலவுகளை அரசு, சம்பந்தப்பட்ட தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்பின் இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இரண்டு வாரங்களில் பிறப்பிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது