அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். துணைவேந்தர் சூரப்பாவின் தன்னிச்சை நடவடிக்கைக்கு கடும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தற்போது தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் துணைவேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.அன்பழகன் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69 சதவிகித இடஒதுக்கீடு பாதிக்கப்படும். கல்விக்கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகும். சிறப்பு அந்தஸ்திற்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க வேண்டியதில்லை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது அவர் தெரிவித்துள்ளார்.