tamilnadu

img

கோயில் நிலங்களில் குடியிருப்போரின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக! - தலைமைச் செயலாளருக்கு சிபிஎம் கடிதம்

கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு முழுவதும் கோவில் இடங்களில் அடிமனைகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு அவர்கள் ஏற்கனவே கோவில் நிர்வாகங்களுக்கு செலுத்தி வந்த பகுதி பணம் 1998லிருந்து மாத வாடகையாக தீர்மானிக்கப்பட்டு அரசாணைகள் 56, 353, 456, 298ன் படி வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2010ல் வெளியிடப்பட்ட அரசாணை 298-ன் படி உள்ள வாடகை நிர்ணயமே பயனாளிகள் கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதம் உயர்த்திட வேண்டுமென்ற உத்தரவால், பயனாளிகளுக்கு பல மடங்கு வாடகை உயர்வு ஏற்பட்டு அவை அனைத்தும் தற்போது நிலுவை வாடகையாக ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் உள்ளது.

    எனவே, இவர்களுடைய வாடகை சுமையை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவில் இடங்களில் வீடு கட்டி குடியிருப்போர்கள், கடை கட்டி வியாபாரம் செய்வோர் சாதாரண ஏழை, எளிய மக்களாகவே உள்ளார்கள். இந்த இடத்துக்கு ஏற்கனவே அந்தந்த கோவில் அறங்காவலர்களே வாடகை தீர்மானித்து வந்தார்கள். 1998 முதல் அறநிலையத்துறை வாடகை தீர்மானித்து பலமுறை தொடர்ந்து உயர்த்தியும் வந்துள்ளது. 1990ம் ஆண்டில் மொத்த வாடகை வருமானம் ரூ. 1 கோடிக்கும் குறைவாகவே இருந்துள்ளது. 2016ம் ஆண்டுக்கு முன்பு இது சுமார் ரூ. 110 கோடியாக உயர்ந்து, தற்போது ரூ. 200 கோடிக்கும் அதிகமாக உயர்வு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறை வாடகை உயர்வு கணக்கிட்டால் சுமார் 150 மடங்கு உயர்ந்துள்ளது. கடுமையான விலைவாசி உயர்வு, கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், வேலை மற்றும் வருமான இழப்புகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு புதிதாக வாடகை உயர்வு மேற்கொள்ளக் கூடாது.
1.    2003ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத் திருத்தம் 34ஏ-ல் “சந்தையில் நிலவும் வாடகை மதிப்பு” படி வாடகை நிர்ணயித்து அதை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும் என்ற உத்தரவால் பல குழப்பங்கள் நிலவுகின்றன. சந்தை அடிப்படையில் நிலம், வாடகை மதிப்பினை தீர்மானிப்பது மிகவும் கடினமாகும். மேலும் தனியார் கட்டிடங்கள் உரிய பராமரிப்பு, அதிக வசதிகள் செய்து கொடுத்து, அதிக வாடகை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அறநிலையங்களுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு அறநிலையத்துறை எந்த பராமரிப்பு பணியையும் செய்வதில்லை. பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட வாடகைதாரரே மேற்கொள்வதால் அவருக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. மேலும் கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் சொந்த உழைப்பின் மூலமே வீடுகள் கட்டியுள்ளனர். அடிமனை மட்டுமே கோவிலுக்குச் சொந்தமானது. சந்தை வாடகை மதிப்பு என்பதை பல அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு சொத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 2019ம் ஆண்டு மேற்கண்டவாறு வாடகை தீர்மானிக்க உத்தரவிட்டதுடன் இந்த வாடகைகளும் 2016ம் ஆண்டு முதல் கட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டது மிகப்பெரிய அநீதியாகும். பல மடங்கு வாடகையை உயர்த்தி விட்டு, அந்த வாடகைத் தொகையினை சில ஆண்டுகளுக்கு முன்தேதியிட்டு கட்ட வேண்டுமென்பதால் பயனாளிகளுக்கு பெரும சுமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ரூ. 4,000ம் வாடகை உள்ள கட்டிடத்திற்கு ரூ. 22,000/- என மாத வாடகையை உயர்த்தி விட்டு இந்த தொகையினை மூன்றாண்டுகள் (36 மாதத்திற்கு) முன்தேதியிட்டு கட்ட வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாயினை பயனாளிகள் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த தொகையினை கட்ட முடியாதவர்களை  ஆக்கிரமிப்பாளர் என அறிவித்து இடத்தை காலி செய்ய கட்டாயப்படுத்தும் நிலைமையே உருவாகியுள்ளது. தற்போது ஒவ்வொரு வாடகைதாரர்களுக்கும் பல லட்சம் நிலுவையில் உள்ளது. எனவே, தற்போதுள்ள சட்டப்பிரிவு 34ஏ-ஐ நீக்கிட சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
2.    குடியிருப்பு பகுதிகளுக்கு தற்போதுள்ள வாடகை 0.10 என்று இருப்பதை 0.05 என்று மாற்றி அமைத்திடவும், ஏழை மக்களுக்கு தற்போதைய வாடகையில் 50 சதம் குறைந்தபட்ச வாடகையை நிர்ணயிக்கவும் கோருகிறோம்.
3.    பட்டியலினம், பழங்குடியினர், அருந்ததியினர், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தற்போதைய வாடகையில் 50 சதம் குறைத்து வாடகை நிர்ணயிக்க கோருகிறோம்.
4.    வாடகை நிர்ணயம் செய்யும்போது வாடகைதாரர்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்தி, அவர்களுடைய கருத்துகளையும் பரிசீலனை செய்து வாடகை நிர்ணயம் செய்திடவும் கோருகிறோம்.
5.    அரசே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதைக் கணக்கில் கொண்டு இதுவரையுள்ள வாடகை நிலுவைத் தொகைiயினை கருணை அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு தள்ளுபடி செய்திடவும் கோருகிறோம். 
6.     புதிய வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்துபவர்களுக்கு வாடகை  நிர்ணயிக்கும் போது வாடகைதாரர்களும், அதிகாரிகளும் பேசி உடன்பாடு செய்து கொண்டு அதனடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்திடவும் கோருகிறோம்.
7.    புதிதாக வரன்முறைப்படுத்தி வாடகைதாரர்களாக வருபவர்களுக்கு வாடகை செலுத்த முன்வரும் தேதியிலிருந்து மட்டுமே வாடகை வசூலிக்க வேண்டுகிறோம். 
8.    வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பயனாளிகளுக்கு இறந்தவர்களின் இறப்புச் சான்று, வாரிசு சான்றிதழ் மட்டும் பெற்றுக் கொண்டு எந்த நிபந்தனையுமின்றி பெயர் மாற்றம் செய்து தர கோருகிறோம்.
9.    குடியிருப்பு பகுதிகளுக்கு வாடகை உயர்த்தாமல் வணிகத்திற்கு மட்டும் தற்போதுள்ள பொதுவான வாடகை நிர்ணயம் செய்யாமல் குடியிருப்புகளோடு சேர்ந்த கடைகளுக்கு வாடகை குறைவாகவும், சிறு-குறு, நடுத்தர கடைகளுக்கு ஏற்றார்போலும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு தனியாகவும் வாடகை நிர்ணயம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்த வாடகை உயர்வை ஐந்தாண்டிற்கு ஒரு முறை உயர்த்திடவும் கேட்டுக் கொள்கிறோம். 
10.    நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு “குத்தகை உரிமை பதிவு 1.10.1969  செய்து தர கோருகிறோம்.
11.    விளைச்சலில் குத்தகை விவசாயிகளிடமிருந்து 75:25 என்ற முறையில் குத்தகை வசூலிக்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள குத்தகை பாக்கிகளை ரத்து செய்திட வேண்டும்.
12.    குத்தகை செலுத்தும் விவசாயிகளிடம் அந்தந்த பசலி ஆண்டுகளில் அவரவர் செலுத்திட வேண்டிய தானியங்களுக்கான தொகையை அந்தந்த ஆண்டுகளில் உள்ள அரசின் விலையை கணக்கிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். 
13.    அறநிலைய சட்டம் 34ன் படி பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து கிரயத் தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு இடங்களை பயனாளிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டுகிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக அரசே பட்டா வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.