tamilnadu

img

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்துகள் இயக்ககம்  

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுதை முன்னிட்டு, 25 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 5 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.  

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பது வரலாற்றுக்குரிய நிகழ்வாகும். இதற்காக தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதேபோல நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.  

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு வருகிற ஜூலை 25 முதல், சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.    

மத்திய கைலாஷில் இருந்து ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பை அடைந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து இயக்கப்பட உள்ளதாகவும் எஸ்ஆர்பி டூல்ஸ், பிடிசி குவாட்ரஸ், தக்ஷிணசித்ரா, முட்டுக்காடு, திருவிடந்தை உள்ளிட்ட 19 இடங்களில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் அதிகமாக வருவார்கள் என்கிற நோக்கத்தில், அவர்களின் வசதிக்காக இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது. போட்டி முடியும் வரை இந்த பேருந்து சேவை இருக்கும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.