மதவாத பாசிச அரசியலை எதிர்க்கும் எனது பங்களிப்பு தொடரும்
முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
சென்னை,செப்.29- மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து விடு விக்கப்படும் மனோ தங்கராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ 2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5 விழுக்காடு என்றிருந்தது. ஒரே ஆண்டில் 2022 இல் 16.4 விழுக்காடாகவும், 2023-ல் 25 விழுக்காடாகவும் உயர்ந்தது.
2023 இல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது. 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்ட ராக உயர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன் என்றும் இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
எந்த கல்விக் கொள்கையை பின்பற்றுவது?தனியார் பள்ளிகள் குழப்பமாம்!
மதுரை,செப்.29- தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இந்தாண்டு எந்தக் கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பமாக உள்ளது.
இதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாடு சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புத்தகங்கள் விலை, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 18 விதமான வரிகளை செலுத்தி வருகிறோம்.
இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கான சுமை கூடியுள்ளது. இந்த சுமை காரணமாக கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 12 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்கிறோம்.
இக்கல்விக்கான கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு இன்னும் வழங்காமல் உள்ளது. இந்தக் கட்டண பாக்கியை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் மும்மொழி கொள்கையை செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கையிலும் மும்மொழி கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்விக் கொள்கையை தெரிவித்துள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதனால் இந்தாண்டு தேசிய கல்விக் கொள்கை அல்லது தமிழக அரசின் கல்வி கொள்கையில் எந்தக் கொள்கை யை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பமான நிலை உள்ளது. கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போல் நிற்கிறோம். இதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்17 பேர் கைது
இராமேஸ்வரம்,செப்,29- தமிழக மீனவர்களின் இரண்டு விசைப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகு களில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை யன்று கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
படகுகளில் இருந்த ஜெபஸ்டியன் (38), ராஜீவ் (35), விவேக் (35), இன்னாச்சி (36), சாமுவேல் (33), பிரிச்சோன் (31), பாஸ்கரன் (30), இருதய நிஜோ (26), மரியா ஸ்டெடின் (27), துரை (39), அருள் தின கரன் (23), சுரேஷ் (45), ஜீவன் ஃப்ரைஷர் (22), மார்க்மிலன் (37), மில்டன் (48), ரொனால்ட் (48), சேசுராஜா (45) ஆகிய 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் மீனவர்கள் அடைக்கப்படுவார்கள், எனத் தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 55 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப் பிடித்து, 413 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.