சென்னை, ஆக.10- சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன். மாணிக்கவேல். இவர் கடந்த 1989-இல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.யாக பணியைத் தொடங்கி, 1996-ல் ஐபிஎஸ் ஆக பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட எஸ்.பி., உளவுப்பிரிவு டி.ஐ.ஜி., சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே ஐ.ஜி., சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. என பல பொறுப்பு களில் இருந்து பின்னர் 2018-ல் ஓய்வு பெற்றார்.\
இவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பணியாற்றிய போது சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக அதே பிரிவில் பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் கடந்த 2018 இல் வழக்கு தொடர்ந்திருந்தார்.\
தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிபிஐ கடந்த வருடம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை பாலவாக்கத்தில் பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமையன்று (ஆக.10) சோதனை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர் பாக முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்க வேலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.