சென்னை, மே 3-அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே 13 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத் துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ஆம் ஆண்டு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக நிலுவையிலிருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றத்தில் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண் டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக ஆஜராக முடியாமல் போனது.இந்நிலையில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வரும் 13-ஆம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.