சென்னை, ஜூன் 17- பயோ கேரிபேக் தயாரிப்புக்கான உரிமத்தை 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரசாணைக்கு ஏற்கனவே முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால், தயாரிக்கப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடை செய்து, அபராதம் விதிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வருகிறது. காரணம் தடை தமிழ்நாட்டில் மட்டும்தான். அண்டை மாநிலங்கள் அவற்றை தடை செய்யாத நிலையில், அங்கிருந்து அவை கடத்தப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக விற்பனை நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநியோகம் செய்யும் வணி கர்கள் அதுபற்றிய விபரம் தெரியாமல் வாங்கி விற்பனை செய்கிறார்கள். பயன்படுத்து வோரும் தங்களின் தேவை நிறைவேறினால் போதும் என்ற நோக்கில் அதனை பயன்படுத்துகிறார்கள். எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னர், விற்பனையா ளர் மற்றும் பயனாளிகளை முறையாக எச்சரித்து, தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே அதிகாரி கள் கைப்பற்ற வேண்டுமே தவிர, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை எந்தவகையிலும் அதிகாரிகள் கைப்பற்றக்கூடாது. மேலும் அந்தப் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறது. அவ்வாறு இல்லாத நிலையில், அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கும், முறையற்ற வழிமுறைகளுக்கும் வித்திடும் என்பதை கவனத்தில் கொண்டு, தயாரிப்பு நிலையிலேயே சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு கொண்டு செல்பவர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும். பொதுநலனும், மக்களுக்கான விழிப்புணர்வும் பாது காக்கப்படும். தவறான அதிகாரிகளின் அத்து மீறல்களால் கடை சீல்வைப்பு, லஞ்சம், கையூட்டு போன்றவை பெறப்பட்டு வணிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற தவறான அதிகாரிகளின் கைகளில், சிறு-குறு வணிகர்களை பிடித்து தந்துவிடக்கூடாது என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். மேலும் பயோ கேரிபேக் தயாரிப்பு நிலையை துரிதப்படுத்தவேண்டும். அவை தயாரிப்பதற்கான லைசென்ஸ்கள் பெறுவதற்கு மிகவும் சிரமப்படவேண்டிய நிலை உள்ளது. 24 மணி நேரத்தில் பயோ கேரி பேக்குக்கான லைசென்ஸ்கள் வழங்கும் முறை கொண்டு வரப்படவேண்டும். பயோ கேரிபேக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை உடனடியாக கிடைக்க துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இந்த கோரிக்கை யினை தமிழக அரசு ஜனநாயக முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை சிறு-குறு வணிகர்களின் நலன்காக்கும் நோக்கில் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.