சென்னை:
மின்வாரியத்தில் கேங்மேன் உள்பட காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு மின்சார வாரியத்தில்களப்பணிகளில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. இதனால் குறைந்த அளவு ஊழியர்களை வைத்துக் கொண்டு நுகர்வோர் களுக்கு திருப்தியான முறையில் சேவை செய்ய முடியவில்லை. இருக்கின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் ஏற்பட்டது. எனவே, களப்பணியிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரி மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங் கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இதன் விளைவாக மின்சார வாரியம் 10 ஆயிரம் கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. அதற்காக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உடற் தகுதி தேர்வும் மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தி, 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக மே மாதம் அறிவித்தது. தேர்ச்சி வரிசை பட்டியலையும் வெளியிட்டது. அதன்படி கேங்மேன் பணியாளர்களை பணியமர்த்த மின்சார வாரியம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு ஏற்கக்கூடியதல்ல.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பீல்ட் அசிஸ்டென்ட், அசசர், ஜூனியர் அசிஸ்டென்ட் என்ற ஆரம்பநிலை பணிகளில் சுமார் 52 ஆயிரம்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளது. மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதனால் மின் நுகர்வோர் சேவை செய்வதில் காலதாமதம் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகள் ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உருவாகிறது. இந்நிலையில் தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள பத்தாயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குவதில் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல. இந்த கால தாமதத்தின் மூலம் பணி நியமனத்தில் தவறுகள் நடக்குமோ என்ற அச்சமும் தேர்வு எழுதியுள்ளவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கேங்மென் பதவிகளை உடல்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டுமெனவும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிடவேண்டுமெனவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின் வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தி யுள்ளனர்.
ஆகவே, மின்வாரியத்தில் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்களையும், காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதரபணியிடங்களையும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்கி, காலியாகயுள்ள இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.