சென்னை:
தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரு மான எடப்பாடி பழனிசாமி திங்கள் காலை முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட வாரியாகச் சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றம் விரைவில் கூடவிருக்கும் நிலை யில், திமுக ஏற்கனவே கொடுத்த சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் திரும்பப்பெற்று அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமாக அதை மாற்றும் வாய்ப்புகளும் இருக்கின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தமிழ்நாடு உளவுத் துறையும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ண ஓட்டம் பற்றியும், அவர்களின் திமுகவுடனான தொடர்பு பற்றிய விவரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விரிவாக அனுப்பி வைத்திருப்பதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில்தான் திங்கள் காலை சுமார் 11 மணி முதல் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் அந்தந்த மாவட்ட எம்.எல்.ஏ.க்களையும் சந்திக்க முடிவு செய்து அதன் படியே சந்தித்தார் எடப்பாடி. உளவுத்துறை குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.க்களைத் தனியாகவும் சந்தித்ததாக தகவல்கள் கூறு கின்றன.
தமது அரசு நீடிப்பதால் ஏற்படும் பலன்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் என பலவற்றையும் இக்கூட்டத்தில் விவாதித்து தன் மீது எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் முதல்வர் சமாதானம் பேசிவருகிறார் என அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அது தொடர்பான ஆலோசனையும் மாவட்ட ரீதியாக அமைச்சர்களின் செயல்பாடு பற்றி ஆலோசனையும் இந்தச் சந்திப்பில் நடந்தது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
முதல்வர் கூட்டத்தை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடத்தாமல் தனது இல்லத்தில் நடத்தியது ஏன் என்ற கேள்வியும் அதிமுக வட்டாரங்களில் எதி ரொலித்துவருகிறது.