சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்ட்டரில் (மோதல் கொலை) 10 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 1998ம் ஆண்டு முதல் ‘என்கவுண்ட்டர்’ முறையில் ரவுடிகள் உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். 1998ம் ஆண்டு ரவுடி ஆசைத்தம்பி சுட்டு வீழ்த்தப்பட்டார். அதன்பிறகு 2002ம் ஆண்டு அயோத்திகுப்பம் வீரமணி உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையன் முருகேசன் என்பவரும் என்கவுண்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போதைய தமிழக டிஜிபி திரிபாதி தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றிய போது, சென்னையில் அதிகளவில் என்கவுண்ட்டர்கள் நடந்தன. ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய போது ரவுடிகள் ‘பங்க்’ குமார், வெள்ளை ரவி ஆகியோர் என்கவுண்ட்டரில் பலியானார்கள். ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் செங்கல்பட்டு கிழக்கு கண்காணிப்பாளராக பணியாற்றிய போது பிரபல கொள்ளையன் சின்னமாரி மற்றும் 4 ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 2010ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் 10 பேர் சென்னையில் போலீசாரின் என்கவுண்ட்டரில் உயிரிழந்துள்ளனர். 2010-ம் ஆண்டு நீலாங்கரையில் திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகிய ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2012ம் ஆண்டு பீகார் மாநிலத்தை சேர்ந்த வங்கி கொள்ளையர்கள் என்று கூறி வினோத்குமார், நவநீத் குமார், ஜெயபிரகாஷ் நாராயணன், ஹரிஷ்குமார், வினய் பிரசாத் ஆகியோர் வேளச்சேரியில் சுட்டுக் கொன்றனர். 2018ம் ஆண்டு தரமணியில் ரவுடி ஆனந்தனும், 2019ம் ஆண்டு மாதவரத்தில் ரவுடி வல்லரசுவும், கொரட்டூரில் தாதா மணிகண்டனும் கொல்லப்பட்டனர். 11வது நபராக அயனாவரத்தில் ரவுடி சங்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.