திருக்கோவிலூர், ஜூலை 28- கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய மாவட்டமாகவே இருப்ப தால் புதிய அரசு தொழிற்சாலைகள், உயர் கல்வி நிலையங்களை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) விழுப்புரம் தெற்கு மாவட்ட 9ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது. முன்னணித் தலைவர் ஆர்.அம்பாயிரம் கொடியை ஏற்றினார். தலைவர் ஏ.வீராசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இ.செல்வம் வர வேற்றார். துணைத் தலை வர் ஆர்.தெய்வீகன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழி ந்தார். மாநில துணைத் தலை வர் எம்.சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஆர்.ராஜ சேகர் வேலை அறிக்கை யையும், பொருளாளர் கே.விஜயகுமார் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி பேசினார். மின்னரங்க நிர்வாகி கே.சலீம் நன்றி கூறினார். விழுப்புரம் தெற்கு மாவட்டம் தொழில் வளர்ச்சி குன்றிய மாவட்டமாக உள்ளதால் அரசு புதிய தொழிற்சாலைகள் துவங்க வேண்டும், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் காலியாக உள்ள பணியிடங்களில் தொடர்ந்து பணியாற்றும் பதிலி தொழிலாளர்கள், ஐடிஐ என்.எம்.ஆர் தொழிலாளர்கள் அத்துக்கூலி தொழிலாளி கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்த வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், எங்கு விபத்து நடந்தாலும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுக்கு கிராம நிர்வாக அலுவலரின் சான்று கேட்காமல் தொழிற்சங்கம் மூலம் பதிவுசெய்ய வேண்டும், மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும், உள்ளாட்சி த்துறை துப்புரவு ஊழியர்க ளின் கோரிக்கைகளை நிறை வேற்றி அவர்களது பழு தடைந்த குடியிருப்புகளை புதுப்பித்துத் தரவேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர், கிராம துப்புரவு ஊழியர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மின்சார வாரியத்தை தனித்தனியாக பிரிக்கக்கூடாது, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 10,000 பேரை வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும், கூட்டுறவுத் துறையில் ரேஷன் கடை விற்பனை யாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், இந்தியா வில் நவீன அறிவியலை அழித்து குலக்கல்வி மற்றும் குலத்தொழிலை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக கே.விஜயகுமார், செயலாள ராக எம்.செந்தில், பொருளா ளராக ஏ.வீராசாமி உள்ளிட்ட 40 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.