tamilnadu

img

கூட்ட நெரிசலில் மாணவி இறப்பு

சென்னை, டிச. 10- ஆர்.கே. நகர் கொருக்குப் பேட்டையில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் சனிக் கிழமை (டிச. 9) வழங்கப்பட்டன. 

இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது நிவாரணப் பொருட்களை வாங்கச் சென்ற கருணாநிதி நகர் 3ஆவது தெருவில் வசிக்கும் வடிவேல், சொக்கம்மாள் தம்பதியின் மகள் யுவஸ்ரீ (14) கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த  கொருக்குப்பேட்டை காவல்  துறையினர் யுவஸ்ரீ உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதனால்தான் கூட்ட நெரிசலில் சிக்கி யுவஸ்ரீ இறந்ததாகவும் கூறி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவண தமிழன், பகுதிச்செயலாளர் விஜய்,  மாவட்டக் குழு உறுப்பினர் விஜயகுமார், பொருளாளர் ஷாஜ கான், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா மற்றும் மாணவர் பெருமன்றத்தினர், இறந்த மாணவியின் பெற்றோர் கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சரவணத்தமிழன் கூறுகையில், காவல்துறையினர் இதை சந்தேக மரணமாக பதிவு  செய்துள்ளனர். அதை மாற்றி யமைக்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி முன்னிலையில் பிரேத பரி சோதனை நடைபெற வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இணை ஆணையர் அபிஷேக்,  வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் சக்திவேல், புளியந் தோப்பு உதவி ஆணையர் மகேந்திரன், வட்டாட்சியர் பரம்புராஜ் ஆகியோர் வாலிபர்  சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது  முதல் அறிக்கை மாற்றி அமைக்கப் படும் என்றும், ஆர்டிஓ விசார ணைக்கு உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்தனர். இதை யடுத்து மாணவி மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை ஞாயிறன்று (டிச. 10) துவங்கியுள்ளது.