சென்னை:
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே, பொருளாதாரம் மீட்சிபெற முடியும் என்று தி இந்து பிசினஸ் லைன் நாளிதழ் கட்டுரை கூறியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மேற்கத்திய நாடுகள், கீழை நாடுகளை விட பின்தங்கியுள்ளன என்பதை விவரித்து கட்டுரையாளர் பரண் பாலகிருஷ்ணன் (29.10.2020) பிசினஸ் லைன் ஏட்டில் எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
வியட்நாம், சீனா, தைவான், ஜப்பான், தென் கொரியா போன்ற கிழக்கு நாடுகளின் நிலைமை ‘நியர்நார்மல்’ (Near Normal) க்கு -அதாவது, இயல்புக்கு அருகில் வந்துள்ளது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கோவிட் தொற்றின் ‘இரண்டாவது அலை’ வீசிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பார், ரெஸ்டாரண்ட்டுகள் மீண்டும் மூடப்படுகின்றன. ஊரடங்கு மீண்டும் திரும்பியுள்ளது. ஒரு உதாரணம். அக்டோபர் 24 அன்று தென் கொரியாவில் 77 புதிய தொற்றுகள். அதே நாளில் அமெரிக்காவில் 79453 தொற்றுகள். முதல் காரணம், இந்த கீழைநாடுகள் சார்ஸ் போன்ற சிறிய இடர்களை எதிர்கொண்ட அனுபவம் கொண்டவை. பரிசோதனை, அடையாளம் காணுதல், தனிமைப்படுத்தல், முகத்திரை அணிதல் போன்ற பயிற்சியைப் பெற்றவர்கள். நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பதிலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஆசியாவின் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிகம் என்பதும் ஒரு அம்சம். இது போன்ற தொற்றுக்களுக்கு பழக்கப்படாத ‘மேலை நாடுகளில்’ மரணங்கள் மிக அதிகமாக உள்ளன. அமெரிக்க மரணங்கள் 2,36,000, பிரிட்டன் மரணங்கள் 44.000ஐ தொட்டுள்ளன.
எப்படி கீழை நாடுகள் எதிர்கொள்கின்றன?
சில உதாரணங்களை பாருங்கள். சீனாவின் ஜின்ஜியாங் (Xinjiang) மாநிலத்தின் தலைநகர் கஸ்கர் (Kashgar) கடந்த வாரம் அறிகுறிகளற்ற 165 கோவிட் தொற்று நோயாளிகளை கண்டறிந்தது. ஞாயிற்றுக்கிழமைக்குள்ளாக விரைந்து 28 லட்சம் மக்களைபரிசோதனைக்கு உட்படுத்தி விட்டது. சீனாவின் துறைமுக நகரம் குயிங்டோ (Qingdo) இம்மாதத்தின் துவக்கத்தில் 5 நாட்களில் 90 லட்சம்
பேரை பரிசோதனை செய்தது. இப்படிப்பட்ட பெருமளவு சோதனைகளால் சீனாவின் நிலைமை முன்-கோவிட் அளவிற்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் பகுதியில் ‘தங்க வார விடுமுறை சுற்றுலாவில்’ (Golden week) 63 கோடி சீனர்கள் பங்கேற்றுள்ளனர். கோவிட் முதலில்வெளிப்பட்ட வுஹான் நகரத்திற்கும்கூட சுற்றுலாவில் மக்கள் வந்துள்ளனர். வியட்நாம் வித்தியாசமான வகையில் கோவிட்டை எதிர்கொண்டுள்ளது. 9.6 கோடி மக்கள்வாழும் நாடு அது. மொத்த தொற்றுக்கள் 1168 மட்டுமே. மரணங்கள் 35. இவ்வளவுக்கும் பெரும் அளவிலான பரிசோதனைகளுக்கு அங்குவளங்கள் கிடையாது. ஆனால்நான்கு சுற்று தொடர் கண்காணிப்பை(தொற்று நபரின் தொடர்பு நபரின் தொடர்பு நபரின் தொடர்பு வரை) செய்துள்ளது. வியட்நாம். தனிமைப் படுத்தலையும் மிக நேர்த்தியாக செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல்களை அளிப்பதற்கு முன்னரே சுதாரித்து தடுப்பு நடவடிக்கைகளை துவங்கிவிட்டது. மக்களிடம் வெளிப் படையாகவும் இருந்துள்ளது.தைவான் 2.4 கோடி மக்கள் உள்ளநாடு. 550 தொற்றுகள், ஏழு மரணங்கள் என்ற அளவிற்கு அந்த தேசத்தால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
மேலை நாடுகள் செய்தது என்ன?
அமெரிக்கா, பிரிட்டன் இரண்டுநாடுகளும் சார்ஸ் அனுபவங்களை எடுத்துக் கொள்ளவில்லை. கோவிட்ஓர் அபாயம் என்பதையே அவை துவக்கத்தில் ஏற்காமல் விலை மதிப்பற்ற நேரத்தை விரயம் செய்துவிட்டன. டொனால்டு டிரம்ப், ஈஸ்டருக்குள் கோவிட் போய்விடும் என்று கூட அறிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 12 வாரங்களில் கோவிட்டுக்கு எதிர் அலை வீசும்; அதுவரையிலும் நான் கை குலுக்குவதை நிறுத்த மாட்டேன் என்று அறிவித்தார். ‘டெஸ்ட் என்பதுவேஸ்ட்’ என்று கூட பேசினார்கள்.கீழை நாடுகளின் கூட்டு வாழ்வுகலாச்சாரம் மேலை நாடுகளில் இல்லாததும் அதற்கு அந்த நாடுகளின் தலைவர்களும் விதி விலக்கல்ல என்பதும் காரணங்களாக இருக்கலாம். அமெரிக்காவின் தொற்று நிபுணர் டாக்டர் அந்தோணியோ பவுசி, ‘பொது சுகாதாரத்தின் மிகஎளிய அம்சங்களைக் கூட அமலாக்காததே காரணம். ஊரடங்கை மட்டும் வைத்து தடுக்க நினைத்தார்.கள். இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?’ என்று நொந்து போய் பேசினார்.
இந்தியாவில்...
‘இந்தியாவுக்கு’ வருவோம். திருவிழா சீசன் என்பதால் இன்னொரு கோவிட் அலை அடிக்கும் என்கிறார்கள். சீனா போல் பெருமளவு பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் நோக்கி இந்தியாமுன்னேறுமா என்பது சந்தேகமே. ஆனால் வரு முன்னர் தடுப்பதற்கு ஆகிற செலவுகள் வந்த பிறகுஅதன் பொருளாதார விளைவுகளை ஈடுகட்ட ஆகிற செலவுகளை விட குறைவு என்பதை இப்போதேனும் அரசு மனதிற் கொள்ள வேண்டும். கடந்த காலாண்டில் தென் கொரியா 1.9 சதவீதம் வளர்ச்சியையும், சீனா 4.9 சதவீதம் வளர்ச்சியையும் எட்டியிருப்பதை பாடமாகஇந்திய அரசு எடுத்துக் கொள்ளுமா? கோவிட் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மீண்டு வர முடியும் என்ற அனுபவத்தை பார்க்குமா?
தமிழில் தொகுப்பு: க.சுவாமிநாதன்