சென்னை, அக்.31- பொதுமக்கள் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுப்புவது போல போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதை பார்த்து குறுஞ் செய்தியின் லிங்கில் சென்று பார்த்தால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிக்கும் வகையில் மர்ம நபர்கள் இந்த குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறார்கள். இதனால் பொது மக்கள் பலர் பதற்றமாகி சம்பந்தப்பட்ட லிங்கில் சென்று பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் மின் வாரிய இணைய தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ் செய்தி வந்தால் செய்ய வேண்டி யது என்ன? என்கிற தலைப்புடன் 6 அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.மின் கட்டணம் கட்ட வில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம்.உங்கள் மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி இணைய தளத்தில் சென்று சரிபாருங்கள். குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் இடம்பெற்றுள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1930- ஐ அழைத்து புகார் அளிக்கவும். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.