பாஜக ஒபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளராக இருப்பவர் வி.வெங்கடேஷ் தொழிலதிபரான இவர், செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் ஆவார். இந்நிலையில் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் நான் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்தவதோடு, கல்வி சார்ந்த அறக்கட்டளை நடத்தி வருகிறேன். என்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்ததால், அவரை கடந்த 2023-ஆம் ஆண்டு காவல்துறை என்கவுண்டர் செய்துள்ளனர். ஆனால் இந்த என்கவுண்டருக்கு நான்தான் காரணம் என வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
இதன் காரணமாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவருடைய பெயரில் குற்றங்களுக்கான சரித்திர பதிவேடு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.அதோடு, செம்மரக் கடத்தல் வழக்கு, துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த குற்றப்பின்னணியும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தால், அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டிருக்க முடியும்.ஆனால், வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும் என தெரிவித்தார்.
மேலும், வெங்கடேஷ் மீது செம்மர கடத்தல் வழக்குகளுக்கும் நிலுவையில் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.