சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். மாநில சுயாட்சி உரிமையைபறிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் மாநில அரசுடன் கலந்தாலோசனை செய்யாமல் மத்திய அரசுக்குகடிதம் எழுதிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அக்டோபர் 16 அன்று இந்தியமாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடந்த போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், சேலத்தில் நடந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், திருப்பூரில் நடந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சந்துரு தலைமை வகித்தார். சேலத்தில் கவின்ராஜ், திருச்சியில் மோகன், மதுரையில் வேல்தேவா,கடலூரில் குமரவேல் , திருவாரூரில் ஹரி சுர்ஜித், நாகப்பட்டினத்தில் அமல் காஸ்ட்ரோ, தூத்துக்குடியில் ஜாய்சன், சிவகங்கையில் ராமகிருஷ்ணன், புதுக்கோட்டையில் ஜனார்த்தனன், நாமக்கல்லில் சரவணன், தேனியில் நாகராஜ்ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.