சென்னை,ஜூலை 10- வேலைவாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக் கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு குறைந்திருப்பதாக ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 89வது ஆண்டு அறிக்கை யாக 2017-18 ஆண்டுக்கான அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2018 ம் ஆண்டு வரை கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 53 ஆயிரத்து 883 பேர் தேர்வு செய்யப்பட்டு அரசு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 ம் ஆண்டில் 15 ஆயிரத்து 668 பேர் தேர்வு செய்யப்பட் டிருந்த நிலையில், 2017 -18 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 117 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. அதே சமயம் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2014 - 2015 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த நிலையில், 2017 - 2018 ஆம் ஆண்டில் 28 சதவீதமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.