tamilnadu

img

சிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர்  கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு செயலாளர்   கே.வி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு  கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு செயலாளரும், தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான தோழர் கே.வி.ராதாகிருஷ்ணன் (வயது 54) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மே 8 அன்று மாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.தோழர் கே.வி. ராதாகிருஷ்ணன் 1987 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இரண்டு முறை பீர்கன்கரணை பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும், ஒருமுறை பேரூராட்சி மன்ற துணைத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி இப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்பு பிரச்சனை, வீட்டுமனைப் பட்டா, ராஜீவ் காந்தி நகர் மலைவாழ் மக்களின் குடியிருப்பு பிரச்சனை, திருநீர்மலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராக, சிறுகடை, வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். இவரது குடும்பமே கட்சிக் குடும்பம். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;